படைப்புகளை அனுப்ப...articles@prabandham.com sriram@prabandham.com

கைத்தலம் பற்றும் கல்யாணமேடை  வாரணமாயிரம்

வைணவம் சமயம் தொடர்பான தளங்களின் தொடர்புகள்

www.srivaishnava.org www.ramanuja.org www.prapatti.com www.srivaishnavam.com www.srivaishnava.net www.acharya.org www.saranagathi.org www.ranganatha.org www.ramanujamission.org

ஒளவையார் அருளிச் செய்த
விநாயகர் அகவல்


சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்

பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கர்பகக் களிறே

முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தான் எழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடிவாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து

தலம் ஒரு நான்கும் தந்தெனக் கருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறாதாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடை பிங்கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழுபாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகமாக இனிதெனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி

என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

இருள் வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்து எனையாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
 

விநாயகர் துதி
 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே!

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட வெழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த வச்சிவன் உரைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமானே!
 

பெரிய புராணம்

 

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

 

தேவாரம்
 

தோடுடைய செவியன் விடையேறியோர்
தூவெண் மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி என்
உள்ளங் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட்பணிந்து
ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய
பெம்மானிவன் அன்றே!
 

அபிராமி அந்தாதி
 

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குளிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார் சடைமேல்
புனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!
 

திருமுருகாற்றுப்படை
 

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே.

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும்
வெஞ்ச மரில்அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்
முருகாவென்(று) ஓதுவார் முன்.

முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.
 

கந்தர் அனுபூதி
 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
 

கந்தரலங்காரம்
 

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்
தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக்
கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா
தவர்க்கொரு தாழ்வில்லையே!

மாலோன் மருகனை மன்றாடி
மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான
தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழில் செங்கோ
டனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில
னேயந்த நான்முகனே!

 
 
Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed & Developed by Alahappa Grafix team.