ஒவ்வொரு சூரிய நாளிலும் சுடச்சுட : Updated Every Sunday
 

தமிழ் வணக்கம்
(வெண்பா)
 


நெஞ்சில் உரம்வேண்டும் நேர்மைத் திறம்வேண்டும்
கொஞ்சு தமிழ்மொழிக் காரிகையே - வஞ்சகரை
வீழ்த்தும் வரம்வேண்டும் எந்நாளும் உன்னடியில்
ஆழ்ந்திருக்க நல்மனமும் தா.
 

கிராமியக் காதை

கற்பனையில் ஒரு கதை
கவிதை ஆக்கம் : செங்கோட்டை ஸ்ரீராம்

 


நெல்லைச் சீமையிலே வயல்பரந்த கிராமத்தில்
வேலம்மாள் வேலப்பன் என்றவிரு காதலர்கள்
பலகாலம் காதலிக்கும் அவ்விருவர் கனவினையே
நெல்லைத்தமிழ் மொழியினில் நீங்களுமே கேட்டிடுவீர்.

வேலப்பன் :-
கருக்கலு நேரத்துல கம்மாகர ஓரத்துல
கன்னத்துல கையவெச்சி கவலயோட காத்திருக்க !
கன்னிப்புள்ள ஒன்னோட கவலயத்தான் களஞ்சிடவே
கண்ணாளன் உன்னோட காதலன்நான் ஓடியாரேன்!

வேலம்மாள் :-
கட்டம்போட்ட கைலிகட்டி பட்டம்போலப் பறக்கும்மச்சான்
பொட்டப்புள்ள என்னப்பாத்து பொசுக்குனுதான் நின்னுப்புட்ட
சுண்டிப்போன எம்முகத்த சோத்துக்கையால் தூக்கிநீயும்
என்னப்பாக்க நேரமான காரணத்த சொல்லிப்புடு!

வேலப்பன் :-
வானம்மழை பொய்த்ததால வயக்காட்டில் தண்ணியில்ல
வருமான்னு இதுவரைக்கும் வானத்தயே பாத்துநின்னேன்
பாத்துநின்னே நேரமாச்சு பகல்பொழுதும் முடிஞ்சிபோச்சு
பாத்திவெட்டி பதமாக்கி இருட்டயிலே ஓடியாரேன்

வேலம்மாள் :-
பாக்கவந்த வேகத்துல மூச்சிறைச்சி விழுந்துடாமே
பக்கத்துல இப்படியே பாந்தமாத்தான் இருந்துவிடு
கக்கத்துல இடுக்கிவச்ச முண்டாசுத் துணியத்தான்
ஏக்கத்தோட காத்திருக்கும் எங்கிட்ட கொடுத்துப்புடு!

வேலப்பன் :-
வட்டமான ஒம்முகத்த வாஞ்சையோட பாக்கயிலே
வாட்டமான எம்முகமும் வானம்போலத் தெளிவாச்சு!
மாடாட்ட வேலசெஞ்சி மாஞ்சிமாஞ்சிப் பாத்தாலும்
கிட்டாத செல்வமெல்லாம் உன்னப்பாத்தா கெடச்சிடுதே!

வேலம்மாள் :-
கண்ணுக்கழகு காளயுன்ன கண்டவளும் கண்ணுவச்சா
கண்ணயுந்தான் நோண்டிருவேன் காலயுந்தான் முறிச்சிடுவேன்.
மண்ணுமேல என்னுசிரு மாய்ஞ்சிடாம இருக்கும்வரை
கண்ணகியாப் பின்வருவேன் காதலையும் சொல்லிப்புட்டேன்!

வேலப்பன் :-
காதலிச்சே காலம்போச்சி கண்ணாலத்த நெனக்கயிலே
பேதலிச்சே போகுதம்மா என்னோட பூமனசு!
கதகதயாக் காரணத்த சொல்லிச்சொல்லி நாள்கடத்தும்
பாதகத்த இன்னியோட தலயசுத்தி எறிஞ்சுப்புடு

வேலம்மாள் :-
தைபொறந்தா வழிபிறக்கும் தரிசுநிலம் பயிராகும்
பைநெறயப் பணம்சேரும் பஞ்சமெல்லாம் பறந்தோடும்
பையப்பைய நம்மகதய பக்குவமா எடுத்துச்சொல்லி
ஐயனையும் ஆத்தாளயும் ஆசிகூற வைக்கோணும்!

வேலப்பன் :-
கன்னிப்புள்ள ஒன்னோட கழுத்துலதான் முடிச்சுமூணு
எண்ணிப்போட எம்மனசும் ஏக்கத்தோட துடிக்குதம்மா!
வண்ணவண்ணச் சேலகள வண்டிநெறய வாங்கிப்போட்டு
என்கையால் கட்டிவிட ஏங்கித்தான் தவிக்குதம்மா!

வேலம்மாள் :-
சேலவாங்கி குமிச்சுவச்சா சேதாரம் அதிகம்மச்சான்
நெலபுலமா வாங்கிப்போட்டு நெலமயத்தான் ஒசத்திக்கணும்
அழகழகா ரெண்டுபுள்ள அடுத்தடுத்து பெத்துக்கிட்டு
வளமாக வாழ்ந்திடனும் பாசத்தோட வளத்திடனும்

வேலப்பன் :-
படிப்பறியா நம்மளுக்கு பொறக்கும்புள்ள ரெண்டையுமே
வயக்காட்டில் இறக்கிவிட எம்மனசுப் ஒத்துக்கலே
பயலுகள இங்கிலீசு பேசவச்சே பாக்கணுமே
கோட்டுசூட்டு போட்டுக்கிட்டு வெளிநாடு பறக்கணுமே!

வேலம்மாள் :-
வயசான நம்மகூட பயலுகளும் இருக்கணும்னா
கான்வென்டில் படிக்கவெக்கும் எண்ணத்தயே விட்டுப்புடு
நம்மநாட்டுப் படிப்பிருந்தா நம்மளத்தான் காப்பாத்தும்
பயல்களோட சேந்துநிதம் பாசத்தோட வாழ்ந்திடலாம்!

வேலப்பன் :-
உலகறியாப் புள்ளநீயும் நாட்டுநடப்ப தெரிஞ்சுக்க
பலகாலம் பாடுபட்டும் நானும்சேத்த பணமுமென்ன?
தெக்குத்தெரு பாண்டியோட சின்னமவன் செல்லப்பாண்டி
அமெரிக்கா போனபின்ன ரெண்டுவீடு கட்டிப்புட்டான்

வேலம்மாள் :-
வாழத்தான் பணம்வேனும் இல்லேன்னு சொல்லலியே
ரெண்டுவீடு கட்டிப்போட்ட பாண்டியோட நெலயப்பாரு!
பொண்டாட்டி இழந்தபாண்டி மூத்தமவன் கிட்டபோனான்
மூத்தமவன் தொரத்திவிட்டான் சின்னமவன் சிலுத்துக்கிட்டான்!

வேலப்பன் :-
அப்படியே இருந்தாலும் ரெண்டுவீட்டு வாடகைய
சொளசொளயா வாங்கியவன் சொகமாத்தான் இருக்கானே!
அதனால்தான் சொல்லிடுதேன் நம்மபுள்ள ரெண்டயுமே
கம்பூட்டர் படிக்கவெச்சி அமெரிக்கா அனுப்பிடனும்!

வேலம்மாள் :-
புரியாமப் பேசும்மச்சான் உலகநடப்ப தெரிஞ்சுக்க
போனகாலப் பேப்பரயே பொரட்டிநீயும் படிச்சுப்பாரு
ஏரொப்ளேன் நாலுவச்சி அமெரிக்கா ஊரத்தான்
பத்தியெரிய வச்சபின்னே பசங்களுமே பயப்படுதே!

வேலப்பன் :-
அமெரிக்கா அதுந்துபோன அந்தகத நமக்கெதுக்கு
கம்பூட்டர் படிச்சுமவன் வெளிநாடு போகோனும்
அந்தநாடு எந்தநாடா இருந்தாத்தான் நமக்கென்ன
புள்ளகள வெளிநாடு போகவச்ச பெருமபோதும்!

வேலம்மாள் :-
பாசத்தோட வளத்தபுள்ள பத்திரமா இருக்கணுமே
பாரதத்தின் மண்வளமும் மறஞ்சிடாம காக்கணுமே
வீரத்தோட எம்மவனும் சாதனைகள் செய்யணுமே
வேலுமவன் இவன்தான்னு பாரதமே பேசணுமே!

வேலப்பன் :-
ஒன்வழிக்கே நானும்வாரேன் அறியாமப் பேசிப்புட்டேன்
எல்லாரும் வெளிநாடு போயிட்டா நம்மகதி?
நெனச்சால கொலநடுங்கு சோத்துக்கு என்னசெய்ய?
நம்மளப்போல் வயல்வேல செஞ்சாதான் சோறுபுள்ள!

வேலம்மாள் :-
உலகுக்கே சோறளிக்கும் உழவனுமே இல்லேன்னா
ஊரெல்லாம் பட்டினிதான் மனிதஇனம் அவ்ளோதான்
பக்குவமா என்வழிக்கு பாதமாறி வந்துப்புட்ட
பல்லாண்டு ஒன்னோட வாழ்ந்துவிட்ட திருப்திமச்சான்!

Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed & Developed by Alahappa Grafix team.