ஒவ்வொரு சூரிய நாளிலும் சுடச்சுட : Updated Every Sunday
 
படைப்புகளை அனுப்ப...articles@prabandham.com sriram@prabandham.com

கைத்தலம் பற்றும் கல்யாணமேடை  வாரணமாயிரம்

வைணவம் சமயம் தொடர்பான தளங்களின் தொடர்புகள்

www.srivaishnava.org www.ramanuja.org www.prapatti.com www.srivaishnavam.com www.srivaishnava.net www.acharya.org www.saranagathi.org www.ranganatha.org www.ramanujamission.org

எம்.எஸ் - காற்றினிலே வரும் கீதம்


இன்றும் நம்முடைய அதிகாலைப் பொழுதுகளை உணர்த்துவதென்னவோ அந்த நெஞ்சை அள்ளும் இனிய நாதம்தான். அந்த நாதத்திற்குரியவரை இறைவன் அழைத்துச் சென்ற பின்பும் அந்த தெய்வீக நாதம் இங்குதானுள்ளது. நாளையும் அந்த இனிய நாதத்தில் மூழ்க இவ்வுலகம் காத்திருக்கும்.


மதுரை ஷண்முக வடிவு சுப்புலட்சுமி எனும் அந்த இசைக் குயிலின் தேனினும் இனிய நாதம், பூர்வ கல்யாணியில் ""மதுராபுரி நிலையே''என அலையடித் தெழும் அந்த ஜீவநாதம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் மோதி என்றும் எதிரொலிக்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத் தைச் சுற்றியுள்ள குறுகிய சந்துகளில் ஒன்று, அனுமந்தராயர் தெருவை நோக்கிச் செல்கிறது.

 

காற்றும் புழுதியும் குதிரைகளின் குளம்படிச் சத்தங்களும் நாகஸ்வர ஒலிகளும் நிரம்பி வழியும் அந்தத் தெருவில் உள்ள, காற்றுக் கூடப் புக முடியாத ஒரு சிறிய வீட்டில் ஒரு பெண்மணி தன் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தாள். ஷண்முகவடிவு என அழைக்கப் பெற்ற அப்பெண்மணிக்கும் சுப்பிரமணிய அய்யர் எனும் வழக்கறிஞர்க்கும் பிறந்த அவர்கள் முறையே வடிவாம்பாள், சக்திவேல், சுப்புலட்சுமி என அழைக்கப் பெற்றனர். கடைக்குட்டி சுப்பு லட்சுமிக்கு பெற்றோர் இட்ட செல்லப் பெயர், குஞ்சம்மா.


குஞ்சம்மாவிற்கு தந்தையின் பாசத்தை முழுமையாக அனுபவிக்க இயலாது போயிற்று. ஒரேயொரு முறை தந்தையுடன் ஒரு குதிரை வண்டியில் மதுரை வீதிகளில் பவனி வந்தது மட்டும் நினைவிருந்தது. குஞ்சம்மாவின் பத்தாவது வயதில் தந்தை காலமானார். சகோதரி வடிவாம்பாளும் தன் 22 வது வயதில் இவ்வுலகிலிருந்து விடை பெற்றாள். மிருதங்க வித்துவானாக உருவாகிக் கொண்டிருந்த சக்திவேலும் இளமையிலேயே போய்விட்டான். ""என்னையும் அம்மாவையும் விட்டு விட்டு எல்லோரும் போய் விட்டனர். எல்லாம் ஒரு கனவு போலிருக்கிறது'' என சுப்புலட்சுமி பிற்காலத்தில் கூறுவ துண்டு.


இசைக்காகவே பிறந்த இக் குழந்தையை சங்கீதவுலகிற்குள் கை பிடித்து அழைத்துச் சென்றது இவரது தாய்தான். பொழுது விடியும் பொழுதே அம்மா சுருதிப் பெட்டியைத் திறந்து விடுவாள். ஒரேயொரு சுருதி மட்டுமே காதில் விழும். அதே சுருதியில் சுப்பு பல மணிநேரம் பாடவேண்டும்.


இந்த தொடக்க காலப் பயிற்சிக்குப் பின் மதுரை ஸ்ரீனிவாசய்யரிடம் சிட்சை. திடீரென ஒருநாள் குருநாதர் இறந்துவிட சுப்பு செய்வதறியாது தடுமாறிப் போனாள். பின் தன் கையே தனக்குதவி எனும் முடிவோடு தானே முயன்று சங்கீதம் பயிலத் தொடங்கினாள்.
அடுத்த வீட்டிலிருந்த கிராமஃபோன் பெட்டியிலிருந்து அப்துல் கரீம் கான், படே குலாம் அலி, பாக்லே, பால கிருஷ்ணபுவ போன்றவர்களின் பாடல் கள் காற்றில் ஒழுகிவரும். அந்த இள வயதிலேயே அப்பாடல்கள் சுப்புவின் உயிரோடு கலந்து விட்டன. பிற் காலத்தில் ""காற்றினிலே வரும் கீதம் பாடியபோது அப்பழைய நினைவுகள் கண்ணீராக வெளிவந்தது'' என எம்.எஸ். கூறியதுண்டு.


குஞ்சம்மாவிற்கு 12 வயது. புதுக் கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை யின் வீட்டில் ஒரு திருமணம். குஞ்சம்மா தன் தாயுடன் அத்திருமணத்திற்குச் சென்றிருந்தாள். சங்கீதத்தின் விசுவ ரூபத்தை அவள் அங்குதான் முதன் முதலாக நேருக்குநேர் கண்டாள். முசிரி சுப்பிரமணியய்யர், செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யர், ஆலத்தூர் சகோதரர்கள், கும்பகோணம் ராஜமாணிக்கம்பிள்ளை, பாலக்காடு மணி அய்யர் என இசை யுலகப் பெரும் புள்ளிகள் நிறைந்த மகாசம்மேளனம்!


இந்த ஜாம்பவான்களின் முன்னிலையில் அந்த இளம்பெண் பயமின்றிப் பாடினாள். ""சங்கீத தேவதையின் மறுபிறவி'' என அன்றே பலரும் அதிசயித்தனர். ""இதுதானய்யா பாட்டு'' என வாயாரப் புகழ்ந்தார் தட்சிணாமூர்த்திபிள்ளை.


""தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவில்லையே'' எனும் வருத்தம் அத்தாயை மிகவும் வாட்டி யது. மதுரையில் இருந்தால் முன்னேற முடியாது என்பதை உணர்ந்த அவ் விருவரும் தங்கள் சுருதிப் பெட்டியை சுமந்துகொண்டு சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.


முப்பதுகளில் சென்னை ஜார்ஜ் டவுன் கலைஞர்களின் சரணாலயமாகத் திகழ்ந்தது. அங்கு புறாக்கூடு போன்ற ஒரு சிறுவீட்டில் அவ்விருவரும் தங்கினர். அங்கிருந்து அவர்கள் சென்றது வீணை தனம்மாளின் வீட்டிற்கு.

 

தனம்மாள் குஞ்சம்மாளின் பாட்டைக் கேட்டுப் பிரமித்துப் போனார். அன்று தொடங்கிய அந்த ஆன்ம உறவு இறுதிவரை நீடித்தது. அக் காலத்தில் அதே ஜார்ஜ்டவுனில் பரத நாட்டியத்தில் கொடிகட்டிப் பறந்தவர் பாலசரஸ்வதி. மற்றொரு கலைவாணி யாகத் திகழ்ந்தவர் லலிதாங்கி. புகழ்பெற்ற இசைவாணி எம்.எல். வசந்தகுமாரியின் தாய்.


குஞ்சம்மா வீணை தனம்மாளிட மிருந்து பதங்களையும் ஜாவளி களையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தார். அனேகமாக இந்த வேளையில்தான் முதல்முதலாக ஒலிபெருக்கி சென்னை யினுள் நுழைந்தது. வடக்கிலிருந்து ரேடியோ வந்தது. வசதி படைத்தவர் களின் வீடுகளில் ஏற்கனவே கிராமஃபோன் இடம் பிடித்திருந்தது.

 

சங்கீதவுலகில் போதிய அளவு அறிமுகமாகாத பாடகர்கள் பலர் இருந்தனர். வீணை தனம்மாளிடமிருந்து ஒரு கீர்த்தனை கூட வானொலிக்குக் கிடைக்கவில்லை. கமகங்கள் நிறைந்த தன் வீணையின் கம்பீரநாதத்தின் வழி ஒழுகிவரும் இனிய கீர்த்தனைகளை வானொலியில் ஒலிப் பதிவு செய்ய தனம்மாள் மறுத்து விட்டார். இதேபோன்று அன்று வானொலியில் பங்குகொள்ள மறுத்த இசைவாணர்கள் அல்லாடியாக்கான், ரஹ்மத்கான், ஸித்தேசுவரிதேவி போன்ற பலர் இருந்தனர்.


இதன்பின்தான் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அந்த வேளையில்தான் தேசீய தளத்தில் ஒரு மறுமலர்ச்சியும் ஒடுக்கப் பட்டிருந்த பெண்ணினத்தின் வாழ்வில் ஒரு விழிப்பு உணர்வும் அலை யடித்து உயர்ந்தன. அந்த சுழற்சியில் உருமாறிப் புதுப்பொலிவுடன் புதுப் பிறவியெடுத்து வந்தவர்கள்தாம், பாலசரஸ்வதி, சுப்புலட்சுமி, பட்டம்மாள், வசந்தகுமாரி போன்றவர்கள்.


ராகம், தானம், பல்லவியை மிக விஸ்தார மாகப் பாடத் தொடங்கினார் எம்.எல். வசந்தகுமாரி. பிராமணப் பெண்கள் மேடை யேறக் கூடாது என்றிருந்த சம்பிரதாயத்தை உடைத் தெறிந்து விட்டு முதல் முறை யாக மேடையேறிக் கச்சேரி செய்தார் டி.கே. பட்டம்மாள். ஆடவர்களுக்கு இணையாக தாரஸ்தாயியில் பிருகாக்களை அனாயாச மாக உதிர்த்து அற்புதங்களை சிருஷ்டித்த ஒரு புதிய தாரகையாக இசை யுலகில் மிளிர்ந்தார் எம்.எஸ். சுப்பு லட்சுமி. மனோதர்ம சங்கீதத்திற்கு புதுப் பொலிவூட்டினார் பிருந்தா. இவ்வாறு இசையுலகிலும் கலையுலகிலும் பெண்ணினம் முதல்முறையாக ஒரு புதிய வரலாற்றைப் படைத்தது.


சில வேளைகளில் பாலசரஸ்வதி குஞ்சம்மாவின் முன் அமர்ந்து பாடுவார். ""கிருஷ்ணா நீ பேகனே பாரோ'' என அவர் பாடும்போது சுருதியும் தாளமும் போன்று அன்பும் பரிவும் ஒன்றோ டொன்று லயித்துவிடும்.'' அம்மா, என்னமா பாடறீங்க!'' என குஞ்சம்மா வியந்து பாராட்டுவாள். பின் அதே பாடலை குஞ்சம்மா பாடும்போது கிருஷ்ணபாவம் ததும்பி வழியும். அதைக்கேட்டு பாலசரஸ்வதியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொரியும். பாலசரஸ்வதி மறைவது வரை இந்த தெய்வீக நட்பு நீடித்தது. பால சரஸ்வதி இறந்த பொழுது குஞ்சம்மா பிரமை பிடித்தது போன்று ஊமையாகிச் சிலை போல நின்றாள்.


சென்னை மியூசிக் அகாடமியில் சுப்புவின் முதல் கச்சேரி. அப்போது சுப்புவிற்கு 18 வயது. அன்றைய பிரபலங்கள் பலரும் அக்கச்சேரிக்கு வந்திருந்தனர். எம்.டி. ராமநாதனின் குரு - டைகர் வரதாச்சாரியார், செம்பை வைத்திய நாதய்யர், காரைக்குடி சாம்பசிவய்யர் போன்ற மாமேதைகள் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். ""நீடுசரணா...'' எனக் கல்யாணியில் ஒரு கீர்த்தனை. அதில் ஒழுகி வந்த நிரவலில் அனைவரும் உருகிப் போய் தம்மையே மறந்தனர். கச்சேரி முடிந்ததும் காரைக்குடி சாம்பசிவய்யர் எழுந்து நின்று, ""குழந்தே, உன் குரலில் வீணை ஒளிந் திருக்கிறது'' எனப் புகழ்ந்தார்.

 

இவ்வாறு மதுரையில் இசையுலகில் அடியெடுத்து வைத்து நடைபயின்ற குஞ்சம்மா எனும் சிறுமி, சென்னையில் எம்.எஸ். சுப்புலட்சுமி எனும் இசை வாணியாக மெல்ல மெல்ல உருவெடுத்தாள். ஜி.என்.பி. நாயகனாகவும் எம்.எஸ். நாயகியாகவும் நடித்து சகுந்தலை வெளி வந்தபோது அப்படம் வந்த தியேட்டர்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பக்த மீரா வெளிவந்ததும் எம்.எஸ். புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார்.


ஒரு போட்டோ செஷனில் வைத்துத்தான் எம்.எஸ்ஸிற்கு முதல்முதலாக தியாகராஜ சதாசிவம் அறிமுகமானார். சதாசிவம் ஒரு காந்தியவாதி மட்டுமல்லாமல் ஒரு விடுதலைப் போராட்ட வீரராகவும் விளங் கினார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிய சதாசிவத்தை எல்லா வழிகளிலும் தன் நம்பிக்கைக்கு உரிய ஒரு தோழராகவே எம்.எஸ். கருதினார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. நாளடைவில் அவர்கள் நேசிக்கத் தொடங்கினார். அதைக் கண்டு பயந்த எம்.எஸ்ஸின் தாய் உடனே தன் மகளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மதுரைக்கே வந்துவிட்டார்.

 

வந்தவுடன் மகளுக்குத் தகுந்த வரனைத் தேடத் தொடங்கி விட்டார். மகள் எதிர்த்தும் தாயின் வரன் தேடும் படலம் தொடர்ந்தது. வேறு வழியின்றி எம்.எஸ். மீண்டும் சென்னைக்கே வந்துவிட்டார்.


இந்த வேளையில் சதாசிவத்தின் முதல் மனைவி இறந்துவிட, சதாசிவம் எம்.எஸ்ஸை திருமணம் செய்ய முடிவு செய்தார். திருநீர் மலையில் வைத்து நடந்த ரெஜிஸ்தர் திருமணத்தில் கஸ்தூரி ஸ்ரீனிவாசனும் கல்கியும் சாட்சிக் கையெழுத்திட்டனர்.
தாயை இழந்த சதாசிவத்தின் இரு குழந்தைகளுக்கும் அதன்பின் எம்.எஸ்தான் எல்லாமே. அவர்தான் ராதாவின் சங்கீத குரு. பிற்காலத்தில் ராதா விசுவநாதன் எம்.எஸ்ஸின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகவே மாறிவிட்டார் எனலாம்.

 

80 களில் நோய்வாய்ப்பட்டு எம்.எஸ்ஸின் இனியநாதம் செயலிழந்த போது, தகர்ந்துபோன அந்த வாழ்க்கையை, துயர்க்கடலிலிருந்து மீட்டு பழைய நிலைக்குக் கொண்டு வந்தது இந்த மகள்தான்.


எம்.எஸ்ஸைப் பொறுத்தவரை சதாசிவம் வெறும் ஒரு கணவர் மட்டுமன்று, ஒரு வழிகாட்டியும் கூட. தான் கச்சேரி செய்யும்போது சதாசிவம் முதல் வரிசையில் அமர்ந் திருக்க வேண்டுமென்பதில் எம்.எஸ். மிகக் கவனமாக இருப்பார். சதாசிவம் சைகை காட்டியதும் எம்.எஸ். ஆலாபனையைத் தொடங்கி விடுவார். எம்.எஸ், சங்கீத வுலகில் படிப்படியாக உயர்ந்து உச்ச நிலையை எட்டிப் பிடித்ததற்கு முழு முதற் காரணமாக இருந்தவர் சதாசிவம்.
ஒவ்வொரு கச்சேரிக்குமுன்பும் சதாசிவம் சில கீர்த்தனைகளைத் தேர்ந்தெடுப்பார். இவ்வாறு அவர் தேர்வு செய்த கீர்த்தனைகளை எம்.எஸ். பாடத் தவறுவதில்லை. சதாசிவம் மறைந்தபோது எம்.எஸ். ஒரு குழந்தையைப் போன்று தேம்பித் தேம்பி அழுதார். ஏதோ தாம் வழிபட்ட ஒரு கடவுளே மறைந்து விட்டது போன்ற பெரும் சோகத்திலாழ்ந்தார். ""எங்களுடைய ஆறுதல் மொழி எதுவும் எடுபடவில்லை. குஞ்சம்மா அதன்பின் பாடுவதையே நிறுத்திவிட்டார்'' என்கிறார் அவரது அன்புத் தோழி டி.கே. பட்டம்மாள்.
காஞ்சி மடத்தில்...


காலம் தான் எல்லாக் காயங்களை யும் எல்லா வேதனை களையும் குணப் படுத்துகிறது. இவ் வுலகமோ நமக்கு ஒரு புதிராகக் காட்சியளிக் கிறது. உயர்ந்தவன் தாழ்கிறான். தாழ்ந் தவன் உயர்கிறான். இங்கு நடைபெறும் சிலகாரியங்களுக்கு நமக்கு காரணமே தெரிவதில்லை. பொதுவாகக் கூறுவதாயின் நாம் இவ்வுலகின் ஏவலாளர்கள். ஆனால் இவ்வுலகமோ சங்கீதத் திற்கு அடிமை. இவ்வுலகைக் கீழடக்க சங்கீதத்தால் மட்டுமே முடியும். சதா சிவத்திற்கு இந்த சூட்சுமம் தெரியும். அவர் போட்ட கணக்கு தப்ப வில்லை. அவர் எண்ணியபடியே எம்.எஸ். தம் சங்கீதத்தால் இவ் வுலகைக் கீழடக் கினார்.
அவர்கள் திருமணம் நடந்து 15 ஆண்டுகளுக்குப்பின் சதாசிவமும் எம்.எஸ்ஸும் காஞ்சி மாமுனிவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி களை தரிசிக்கச் சென்றனர். இசைக் குயிலின் கானத்தில் மகாப் பெரிய வாள் லயித்தார். அதன் விளைவாக பிற்காலத்தில் ஐ.நா.சபையில் எம்.எஸ். பாடுவதற்கென்றே அவர், ""மைத்ரிம்'' பாடலை உருவாக்கிக் கொடுத்தார்.


உலகிற்குச் சுவர்களில்லை


எம்.எஸ்ஸைப் போன்று சுருதி சுத்தமாகப் பாடுபவர்கள் மிகச் சிலரே! உணர்வு பூர்வமாக, தெளிவாக அவர் பாடலை உச்சரிக்கும் விதமே அலாதி யானது. அவர் தார ஸ்தாயியில் பாடுவதைக் கேட்டால் அதற்கீடாக வேறொன்றையும் கூற முடியாது. பட்டம்மாள் தீட்சிதர் கிருதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தது போன்று எம்.எஸ். அன்ன மாச்சாரியரின் பாடல் களுக்குப் புத்துயிரளித்தார். தியாகய்யரின் கீர்த்தனைகளில் மூழ்கித் திளைத்தார்.

 

செம்பை தோடி ராகத்தில் ராகம், தானம், பல்லவி பாடுவதைக் கேட்பதில் எம்.எஸ்ஸிற்கு மிகவும் விருப்பம். ஒருமுறை எம்.எஸ்ஸின் கச்சேரிக்கு வயலின் வாசிக்க ஒப்புக் கொண்டவர் வரவில்லை. எதிர்பாராத விதமாக அங்கு வந்த செம்பைதான் அன்று எம்.எஸ்ஸிற்கு வயலின் வாசித்தார். ""எனக்கு அவர் வாசித்தது நான் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம்!'' என இதுபற்றி பிற்காலத்தில் எம்.எஸ். கூறுவதுண்டு.


கச்சேரிக்கு முன்பு நீண்ட தயாரிப்பில் இறங்கிவிடுவார். பாட வேண்டிய உருப்படி களை முன்பே தீர்மானித்துவிடுவார். சதா சிவத்திடம் அதுபற்றிக் கூறுவார். அவரது ஆலோசனைகளையும் குறித்துக் கொள்வார். காலையில் சாதகம் செய்வார். கீர்த்தனை களை மீண்டும் மீண்டும் பாடி உறுதிப் படுத்திக் கொள்வார். ""செய்யும் தொழில் தெய்வம்'' என்பதில் முழு நம்பிக்கை யுடையவர். இத்தகைய தயாரிப்புகள் எல்லாம் கச்சேரிக்கு முன்புதான். கச்சேரிக்காக மேடையில் அமர்ந்து விட்டால், பின் எதுவுமே தேவை யில்லை. அனைத்தும் கங்கையின் பெருவெள்ளம் போல் தடையின்றி ஒழுகிவரும்.


1963 இல் ஸ்ரீ வேங்கடேசுவர சுப்ர பாதம் ஒலிப்பதிவாகி வெளிவந்தது. ஆர்.எஸ். கோபால கிருஷ்ணன் வயலின். டி.கே. மூர்த்தி மிருதங்கம். அதன்பின் இவ்வுலகின் அதி காலைப் பொழுதுகளை இன்று வரை எம்.எஸ் தான் தம் இனிய நாதத்தின் மூலம் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார். ""சுவாதித் திரு நாளின், பாவயாமி ரகுராமத்தை'' அதற்கேயுரிய பாவத்தோடு இவர் பாடியது போன்று இது வரை யாருமே பாடிய தில்லை.'' இது சங்கீத கலாநிதி செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யரின் பாராட்டுரை. அந்த ராக மாலிகைக்கு ஓர் அங்கீ காரம் கிடைத்ததே எம்.எஸ். அதைப் பாடிய தால்தான் என்கிறார் அந்த சங்கீத மேதை.


வேங்கடமஹியின் 72 மேளகர்த்தா ராகங் களைப் பற்றிய ஆய்வு முழுமை பெறுவதற்கு எம்.எஸ். அதற்கென உருவாக்கிய சங்கீத பாஷ்யமும் ஒரு காரணம் என்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.


35 சுத்த மத்தியம மேளகர்த்தா ராகங்களையும் 36 பிரதி மத்தியம மேளகர்த்தா ராகங்களையும் எம்.எஸ். மேடைகளில் அனாயாசமாகப் பாடுவார். இதற்குத் துணையாக நின்று, இம்முயற்சி வெற்றிபெறப் பெரிதும் உழைத்த கடைய நல்லூர் வெங்கட்ராமனை ஆதரிப்பதற்காகவே எம்.எஸ். ஒரு கச்சேரி செய்தார்.


எம்.எஸ். தாமே வலியச் சென்று சந்தித்த இரண்டு குருநாதர்கள் உள்ளனர். ஒருவர் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர். மற்றொருவர் முசிறி சுப்பிரமணிய அய்யர்.

 

மகாவைத்தியநாத சிவனின் மேள ராக மாலிகையின் உயிரோட்ட மான சாரத்தைப் பிழிந்து எடுத்து எம்.எஸ்ஸிற்கு அளித்தார் செம்மங்குடி. தாரஸ் தாயியில்கூட பிசிறின்றி ஒளிர்விடும் நாத சங்கீதம் முசிறியுடையது. நிரவல் பாடும் போது கூட சாகித்தியாம்சத்தை உணர்த்தும் சூட்சுமத்தை எம்.எஸ். கற்றுக் கொண்டது முசிறியிடமிருந்துதான். பாரம்பரிய சங்கீத முறைகளிலிருந்து சற்றும் வழுவாத முசிறி, எம்.எஸ் ஸின் எந்தவொரு சந்தேகத் தையும் தீர்க்க எப்பொழுதும் தயாராக இருந்தார்.


1982 இல் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸும் மார்க்ரேட் தாட்சரும் இந்திரா காந்தியும் வீற்றிருந்த ராயல்ஃபெஸ்டிவல் ஹாலில் எம்.எஸ். பாடினார். ரஞ்சனியில் ""சதாசாரங்க நயனே!'' எனும் கீர்த்தனையுடன் கச்சேரி தொடங்கியது. தொடர்ந்து துளசிதாஸ், சூர்தாஸ், மீரா போன்றவர்களின் பஜன்கள். பின் காந்திஜிக்குப் பிரியமான வைஷ்ணவ ஜனதோ.

 

அதன்பின் தாகூர், பாரதி, ஸ்ரீநாராயண குரு போன்றவர்களின் பாடல்கள். கூட்டம் முழுவதும் உணர்ச்சி வயப்பட்டு விம்மியது. இந் நிகழ்ச்சிக்குப் பின் ரவிசங்கரின் சிதார் நிகழ்ச்சியும் ஸுபின் மேத்தாவின் பிலோ ஆர்மோனிக் ஆர்க் கெஸ்ட்ரா நிகழ்ச்சியும் நடைபெறவிருந்தன. எம்.எஸ்ஸின் நிகழ்ச்சி முடிந்ததும் ஸுபின் மேத்தா எழுந்து அவையோரை நோக்கிக் கூறினார்... ""இனி இந்த மேடையில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை!''


""மற்றவர்கள் பாடட்டும். எம்.எஸ். பேசினாலே போதும். அதுவே சங்கீதம்தான்'' என்றார் மகாத்மா. ""நான் ஒரு சாதாரண பிரதம மந்திரி. ஆனால் நீங்களோ சக்ர வர்த்தினி. ஆம். சங்கீத சக்ரவர்த்தினி!'' இது பண்டிட்ஜியின் பாராட்டுரை.


பாலக்காடு மணிஅய்யர் எம்.எஸ்ஸிற்கு பக்கவாத்திம் வாசிக்க மறுத்ததுண்டு. அப் பொழுதெல்லாம் எம்.எஸ்ஸிற்கு வயலின் வாசித்தது சௌடையாதான். தான் எம்.எஸ்ஸிற்கு மிருதங்கம் வாசிக்கா விட்டாலும் மணிஅய்யர் என்றுமே எம்.எஸ் ஸின் சங்கீதத்தைக் குறைத்து மதிப்பிட்டதே யில்லை. மாறாக சங்கீதத்தின் மூலம் உள்ளத்தை உருக்கும் மூன்று நாதங்களுக்கு உரியவர்களை மணிஅய்யர் வரிசைப் படுத்துகிறார். அரியக்குடி, செம்பை, சுப்புலக்ஷ்மி.


இசையரசி எம்.எஸ்ஸின் மறைவோடு கர்நாடக இசையுலகில் ஒரு சகாப்தம் முடிவிற்கு வந்துவிட்டதென்றே கூறி விடலாம். எளிமைக்கும் மனிதநேயத்திற்கும் அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.


1966 ஐ.நா. சபையின் அழைப்பின் பேரில் அங்குச் சென்று பாடினார். கர்நாடக சங்கீதத்தின் வரலாற்றில் முதல்முதலாக மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி எனும் பட்டத்தைப் பெற்ற முதல் பெண்மணி எனும் பெருமைக்கு உரியவராகத் திகழ்ந்ததும் எம்.எஸ். மட்டுமே. 1974 இல் மேகசேசே விருது. 1996 இல் பாரத்ரத்னா விருது.
அவர் மறைந்த போது இந்திய ஜனாதிபதியே டில்லியிலிருந்து பறந்துவந்து இறுதி மரியாதை செலுத்தினார். இந்த இசைக் குயிலால் தமிழகம் பெருமை பெற்றது.


இன்று வறண்டு காணப்படும் காவிரி ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதியாக ஒழுகியதுண்டு. காவிரி வற்றிவிடலாம். ஆனால் சங்கீத வுலகில் எம்.எஸ். என்றும் வற்றாத ஒரு காவிரி. எம்.எஸ்ஸின் அந்த சங்கீதம் எனும் ஜீவநதி என்றும் நம்முடன் உள்ளது. அந்த நாதத்திற்கு அது தோற்றுவிக்கும் அவரது அமர கானத்திற்கு என்றும் அழிவில்லை! எப்பொழுதும் எங்கும் நிறைந்த நாதப்பிரம்மம் அது!!


இதோ காற்றினிலே மிதந்து வரும் அந்த சகுந்தலையின் தெய்வீகக் குரல் ""எங்கும் நிறை நாதப்பிரம்மம் - எங்கும்!''

 

-செங்கோட்டை வி.ஜனார்த்தனன்

Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed - Developed by Alahappa Grafix team.