ஒவ்வொரு சூரிய நாளிலும் சுடச்சுட : Updated Every Sunday
 
படைப்புகளை அனுப்ப...articles@prabandham.com sriram@prabandham.com

கைத்தலம் பற்றும் கல்யாணமேடை  வாரணமாயிரம்

வைணவம் சமயம் தொடர்பான தளங்களின் தொடர்புகள்

www.srivaishnava.org www.ramanuja.org www.prapatti.com www.srivaishnavam.com www.srivaishnava.net www.acharya.org www.saranagathi.org www.ranganatha.org www.ramanujamission.org

ப்ரமர கீதம்
வண்டின் பாடல்...


கட்டுரை: சாந்தா ராஜகோபால்


ஸ்ரீ கிருஷ்ணனுடைய லீலைகள் அநேகம். குழந்தைப் பருவத்திலிருந்தே அவனுடைய லீலைகள் எல்லோரையும் கவர்ந்து விட்டன. குழந்தை கிருஷ்ணன் தன் வாயில் அண்டசராசரங்களைக் காட்டி, யசோதையை பிரமிக்க வைத்து விட்டான். பூதனா சபதம், காளிய நர்த்தனம், கோவர்தன மலையைக் குடையாகப் பிடித்து, பசுக்களை மழையிலிருந்து காப்பாற்றுதல் ஆகிய எத்தனையோ லீலைகள் அதிசயிக்கும்படி உள்ளன.

இதைத் தவிர, பகவானுக்கு ஆதி அந்தம் இல்லை, உருவம் இல்லை என்று வழிபடும் நிர்குணோபாசன முறையைப் புரிய வைத்தார். கிருஷ்ணனிடம் கோபியர்களுக்கு அளவு கடந்த பக்தி, அன்பு, காதல் உண்டு. அது தெய்வீகக் காதல்.

ரஸகான் என்னும் கிருஷ்ண பக்த முஸல்மான் கவி கூறுகிறார்... "எந்த பகவானை, ஆதிசேஷன், சிவன், பிள்ளையார், இந்திரன் முதலான தேவர்கள் எப்பொழுதும் பூஜிக்கிறார்களோ, யாரை ஆதி அந்தம் இல்லை, உருவம் இல்லை என்று சொல்லுகிறாரகளோ, யாரை நாரத முனி முதல் சுகர்வ்யாஸர் வரை பாடுகிறார்களோ, கரை கடக்க இயலாது தோற்று விடுகிறார்களோ அந்த பகவானை, இடைச்சிப் பெண்கள் உள்ளங்கை மோரில் கவர்ந்து ஆட்டி வைக்கிறார்கள்! இது கோபியர்களுக்கு கிருஷ்ணனிடம் உள்ள, ஆழ்ந்த நிர்மலமான பிரேமையைக் குறிக்கிறது.

ஒரு சமயம், கிருஷ்ணன் கோகுலத்தை விட்டு மதுராவுக்குப் போய் விடுகிறார். அப்பொழுது கிருஷ்ணனை விட்டுப் பிரிந்த விரஹ தாபமானது கோபியர்களை மிகவும் வாட்டுகிறது. பசி இல்லை; சாப்பாடு இல்லை; தூக்கம் இல்லை... விரஹ தாபத்தினால் துடிக் கிறார்கள். அவ்வழியே வழிப்போக்கர் யாராவது வந்தால், அவரை வழிமறித்து கிருஷ்ணனைப் பற்றி விசாரிக்கிறார்கள்.

கிருஷ்ணனுடைய தோழன் உத்தவர். அவருக்கு, தான் வழிபடும் முறை "பகவானுக்கு குணமில்லை; உருவம் இல்லை' என்ற நிர்குண உபாசன முறைதான் சிறந்தது என்ற கர்வம். அவருடைய கர்வத்தை அடக்கும் பொருட்டு, கிருஷ்ணன் உத்தவரை கோகுலம் அனுப்புகிறார்.


உத்தவர் வ்ரஜ பூமியான கோகுலத்திற்கு வருகிறார். கோபியர்களை சந்திக்கிறார். கோபியர்கள் வெகு ஆவலுடன் கிருஷ்ணனைப் பற்றி விசாரிக்கிறார்கள்.

அப்போது அங்கு ஒரு வண்டு வருகிறது. வண்டை நடுவராக வைத்துக் கொண்டு உத்தவருக்கும் கோபியர்களுக்குமிடையே ஒரு பட்டிமன்றம் நடக்கிறது. ஆகையால்தான் இதை ப்ரமரகீதம் (வண்டின் கீதம்) என்கிறார்கள். இந்த கீதத்தை சூர்தாஸ், நந்ததாஸ், க்ருஷ்ணதாஸ் ஆகிய அநேகம் கவிகள் எழுதியுள்ளனர். அதில் நந்ததாஸ் எழுதிய கீதம் மிகச் சிறந்தது. இது கோபியர்களுக்கும் உத்தவருக்கும் இடையே நடந்த தர்க்கத்தை வெளிப்படுத்துகிறது.


உத்தவர் சொல்லுகிறார் : ""கிருஷ்ணனிடமிருந்து நான் உங்களுக்கு ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன். அதைச் சொல்லி விட்டு நான் மறுபடி மதுராபுரி போய் விடுவேன். பகவானுக்கு குணம், உருவம் உண்டு என்று சொன்னால், வேதம் புராணம் எங்குத் தேடினாலும் குணமில்லை என்றுதான் சொல்லுகிறது.''

கோபிகள் கூறுகிறார்கள்... ""அவருக்கு குணமில்லை என்றால் (பகவதீய குணங்கள்) பூவுலகில், ஸத்ய, தமஸ், ரஜ என்னும் மூன்று குணங்கள் எங்கிருந்து வந்தன? விதை இல்லாமல் மரம் வருமா?


"பகவானுடைய குணங்களின் நிழல், மாயையாகிற கண்ணாடியில் விழுகிறது; நிர்மலமான தண்ணீர் சேற்றில் விழுந்தார்ப்போல்... இரண்டு குணங்களும் தனித்தனி, கேள் கிருஷ்ணரின் தோழா!''

உத்தவர் : ""சூரிய சந்திரர்களுக்கு குணமுண்டு என்றால், ஏன் அவர்களை, பகவானை, குணங்களுக்கு அப்பாற் பட்டவன் என்கிறார்கள்?''

கோபியர்: ""சூர்ய சந்திரர்கள் ஆகாயத்தில் மறைந்து கொண்டு பிரகாசிக்கிறார்கள்? கண் இல்லாமல் எப்படிப் பார்க்க முடியும்? கர்ம யோகமான கிணற்றில் விழுந்தவர்களுக்கு ஸத்யம் எப்படித் தெரியும்? கேள் சியாமளனுடைய தோழா!''

உத்தவர் : ""நீங்கள் இந்திரியக் கண்ணால் பார்க்கும் உருவம் என்பது முழுமையான பகவான் இல்லை. கிருஷ்ணனே வேறு ஸ்வரூபம். இந்திரியக் கண்ணால் இந்த உருவத்தைப் பார்த்து திருப்தி அடைந்து விடுகிறீர்கள்... கேளுங்கள் கோபியரே!''

கோபியர் : ""நாத்திகன் எப்படி அன்பின் ரூபத்தைக் காண்பான்? ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் சூரியனை விட்டு, அதன் நிழலான வெயிலை எவன் நாடுவான்! எப்படி உள்ளங்கையில் கோடி பிரம்மாவைப் பார்ப்போமா, அதுபோல் எங்களுக்கு அந்த கிருஷ்ண ரூபத்தைத் தவிர வேறு எதுவும் ரசிக்காது. பிடிக்காது! கேள் கிருஷ்ணனின் தோழா!''

அப்போது எங்கிருந்தோ ஒரு வண்டு ரீங்காரம் செய்து கொண்டு கோபியர் நடுவில் வருகிறது. அவர்களின் காலின் மேல் தாமரைப்பூ என்று நினைத்து ஏறி ஏறி இறங்குகிறது. கோபியர் எல்லோரும் சேர்ந்து வண்டைத் தாக்குகிறார்கள். வாத விவாதம் செய்கிறார்கள். அன்பான வார்த்தைகளால் சாடுகிறார்கள்! உன்னுடன் சேர்ந்துதான் நந்தகிஷோர் கபடன் ஆனார். இங்கிருந்து நீ தூரச் சென்றுவிடு!

கிருஷ்ணனும் கறுப்பு நிறம். பீதாம்பரம், மஞ்சள் வேஷ்டி அணிந்து இருக்கிறார். வண்டும் கறுப்பு மஞ்சள் நிறம். அங்கு வெண்ணெய் திருடி சாப்பிட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார். இந்தக் கபட வேஷத்தை நாங்கள் நம்ப மாட்டோம்.

ஒரு கோபிகை சொல்கிறாள் : "ஏ வண்டே! நீ அன்பைப்பற்றி என்ன கண்டாய்? ஒவ்வொரு பூவின் மேலும் உட்கார்ந்து எல்லாம் சமம் என்று நினைத்தாய்! அதுபோல் எங்களையும் நினைக்கிறாய்! இரட்டை ஞானத்தை உண்டாக்கி, பிரேமானந்தத்தில் மூழ்கிய எங்களை துக்கமடையச் செய்கிறாய்.''

ஒரு கோபி : "ஏ வண்டே! உன் வாயில் தேன்மொழி இருக்கும் என்று யார் சொன்னது? நீ ஞான யோகத்தை முடிச்சுப் போட்டுக் கொண்டு வீணாக அலைகிறாய். எல்லோருடைய ரத்தத்தையும் குடித்துவிட்டு உதட்டை சிவப்பாக்கிக் கொண்டிருக்கிறாய். இப் பொழுது கோகுலம்வந்து யாரை காயப்படுத்தப் போகிறாய். உன்னை எந்தப் பாவி பெற்றாளோ?

"ஹே வண்டே! நீ விபரீத ஞானத்தைப் போதிக்கிறாய். முக்தி அடைந்தவர்களை மறுபடி கர்மம் செய்யத் தூண்டுகிறாய். வேதம் உபநிஷத ஸாரமெல்லாம் கிருஷ்ணனுடைய குண விசேஷங்கள். ஆத்ம சத்தி அடைந்தவர்களை கர்ம யோக பாடசாலையில் மேலும் மேலும் தள்ளுகிறாய். உனக்கு வெட்கமாக இல்லையா. கிருஷ்ணன் யோகி, நீ சிஷ்யன். மதுவனத்தை மறந்து இப்பொழுது கோகுலம் வந்திருக்கிறாய். இங்கு நாங்கள் எல்லோரும் கிருஷ்ணனுடைய ப்ரேமைகள். உன் வலையில் நாங்கள் விழமாட்டோம்.
""வண்டு உருவத்தில் வந்து, எங்கள் குல மான மரியாதை எல்லாம் போக்குகிறாயே''

இவ்வாறு சொல்லி கோபியர்கள் கிருஷ்ணனை நினைத்து ""ஓ'' வென்று கதறுகிறார்கள்.

கோபியருடைய சுத்தமான உண்மையான பக்தி, பிரேமையான வார்த்தைகளைக் கேட்டு, உத்தவருடைய ஞான யோகம் முழுமையாக நாசமாயிற்று.

உத்தவர் சொல்லுகிறார்... கோபியர்கள் கிருஷ்ணனுக்குச் சொந்தமான வர்கள். இதைச் சொல்லவே ஆச்சர்யமாக இருக்கிறது. இவர்களைப் பார்த்ததிலேயே நான் தன்யனானேன். என் ஜீவன் சபலமாயிற்று. கல்மிஷமான என் ஞானயோகம் அழிந்துவிட்டது. ப்ரேமை அன்பு, ஞான யோகத்திற்கு அப்பாற்பட்டது. சிறந்தது.

வைரத்திற்கு எதிரில் கண்ணாடிக் கல் இருப்பது போல் வ்ரஜபூமிக்கு வந்து, கிருஷ்ணனிடத்து உள்ள கோபியர்களின் உன்னதமான பக்தி ப்ரேமையைக் கண்டு லயித்த உத்தவர், தன்னுடைய அல்ப ஞானமான யோகமூட்டையைக் கட்டிக்கொண்டு மதுரா செல்கிறார். கிருஷ்ணனிடம் கோகுலத்தில் நடந்தவற்றைச் சொல்லி "நீ உடனே கோகுலம் போய், உன்னுடைய பிரிவால் விரஹதாபத்தால், வாடித் துடித்துக்கொண்டிருக்கும் கோபியர்களுக்கு வாழ்க்கை கொடு'' என்கிறார்.

Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed & Developed by Alahappa Grafix team.